பிறர் குறை பேசுவதும், ஒற்றுக் கேட்பதும் தடை

இஸ்லாம் சமூக வாழ்வை சீர்படுத்தும் நோக்குடன் சமூகத்தில் ஒருவர் மற்றவருடன் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும், உறவாட வேண்டும் என்பதுபற்றி மிகச் சிறப்பான முறையில் ஒழுங்கு முறைகளை வகுத்துக் காட்டுகின்றது.
குறிப்பாக, ஒருவர் மற்றவரின் குறை தேடுவதுபற்றி பின்வருமாறு குர்ஆன் சுருங்கச்சொல்லி விளங்க வைக்கின்றது. “எவருடைய குறைகளையும் நீங்கள் துருவித் துருவி விசாரித்துக்கொண்டிருக்க வேண்டாம்.”(49 : 12)
இந்த இறை கட்டளையிலிருந்து நாம் விளங்கிக் கொள்ள வேண்டியது யாதெனில், நாம் எந்தச் சந்தர்ப்பத்திலும் எமது அயலவரோ, சகோதரரோ, உறவினரோ, நண்பரோ ஏதும் குறைகள் விட்டிருப்பின் அந்தக் குறைகள் பற்றி விரிவாக பலரிடமிருந்து துருவித் துருவி விசாரித்து வீண் பேச்சுக்களை பேசி பெறுமதியான நேரகாலத்தை வீணாக்குவது அல்லாஹ்விடத்தில் வெறுப்பூட்டக் கூடியது என்பதாகும்.
மேலும், இந்த வெறுப்பூட்டத்தக்க குறைபேசுதல் பற்றிய மற்றுமொரு குர்ஆன் ஆயத்தையும் ஈண்டு ஆராய்வது பொருத்தமானது.
“மேலும் விசுவாசங்கொண்ட ஆண்களையும், விசுவாசங்கொண்ட பெண்களையும் அவர்கள் செய்யாத (குற்றத்)தைச் செய்ததாகக் கூறி துன்புறுத்துகிறார்களே அத்தகையவர்கள் நிச்சயமாக(ப் பெரும்) அவதூறையும் பகிரங்கமான பாவத்தையும் சுமந்து கொண்டனர்”(33:58)
இந்தத் திருமறை வசனத்திலிருந்து நாம் மற்றவர்களைப்பற்றி ஆதாரம் எதுவுமின்றி வீணாகக் குறைபேசித் திரிந்தால் அது அவர்களை உளவியல் ரீதியாக மனதைப் பாதித்து துன்புறுத்துவதாக அமைந்து விடுகின்றது. அவர்கள் தாம் செய்யாத குற்றத்தை செய்ததாக எடுத்துக்காட்டி அவமானப்படுத்துவது,
அவதூறாகவும் பகிரங்க பாவமாகவும். இறைவனிடத்தில் கணிக்கப்படுவதால் அதைவிட்டும் தவிர்ந்து கொள்ள வேண்டும்.
சமூகத்தில் உறவுகளை உறுதிப்படுத்துவதில் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் போதனையும் சாதனையும் எமக்கு எடுத்துக்காட்டாக அமைவதை பின்வரும் நீண்ட ஹதீஸ் மூலம் உணர்ந்து கொள்ளலாம்.
ரஸ¤லுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹ¤ரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். தவறான எண்ணங்களை விட்டும் நான் உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில், நிச்சயமாக தவறான எண்ணத்தின் மூலம் பேசப்படும் வார்த்தை பேச்சுக்களில் மிகவும் பொய்யானதாகும்.
மற்றவர்களின் தவறுகளைத் துருவித் துருவித் தேடாதீர்கள். உலக ஆசையில் போட்டிபோட வேண்டாம். தமக்குள் பொறாமை கொள்ள வேண்டாம். தமக்குள் கோபம் கொள்ள வேண்டாம். ஒருவருக்கொருவர் புறக்கணித்து நடக்க வேண்டாம். அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ் உங்களுக்கு ஏவியது போல நீங்கள் சகோதரர்களாக இருங்கள்.
ஒரு முஸ்லிம் மற்ற முஸ்லிமின் சகோதரராவார். அவருக்கு அநியாயம் செய்ய மாட்டார். அவருக்கு உதவி செய்வதை விட்டு விடவும் மாட்டார். அவரை அற்பமாகக் கருதவும் மாட்டார்.
நெஞ்சைக் காட்டி ‘தக்வா’ இங்கே இருக்கிறது, தக்வா இங்கே இருக்கிறது எனக் கூறிவிட்டு, ஒரு மனிதர் தன் முஸ்லிமான சகோதரரைத் தரக் குறைவாக எண்ணுவதே அவர் கெட்டவராக ஆகுவதற்குப் போதுமானது. ஒவ்வொரு முஸ்லிமுடைய இரத்தமும் மானமும் அவரின் பொருளும் மற்ற முஸ்லிமுக்கு ஹராமாகும். மேலும் நிச்சயம், அல்லாஹ் உங்கள் உடல்களையோ உங்களின் தோற்றத்தையோ பார்ப்பதில்லை. உங்கள் உள்ளங்களையும் செயல்களையுமே பார்க்கிறான் எனத் தொடர்ந்து கூறினார்கள்.

No comments:

Post a Comment

 
Blogger Widgets