இடைவெளியின்றி ஒவ்வொரு நாளும் நீண்ட நேரம் கணினியைப் பார்த்து உபயோகிக்கும் பலருக்கு உடலிலும், கண்களிலும் ஏற்படும் சிரமமே'Computer Vision Syndrome'
என்றழைக்கப் படுகிறது. கணினியில் ஒரு நாளில் மூன்று மணி நேரமும், அதற்கு
மேலும் தொடர்ந்து வேலை செய்பவர்களில் 90% சதவிகிதத்தினர்க்கு இந்த பாதிப்பு
ஏற்படுகிறது.
உடலில் சோர்வு, பின் கழுத்து, முதுகு மற்றும் தலை வலி, கைகள், மணிக்கட்டு
மற்றும் தோள் பட்டை வலி ஆகிய நோய்க்குறிகள் ஏற்படுகின்றன. தொடர்ந்து
கணினித் திரையைப் பார்த்துக் கொண்டிருப்பதாலும், கண் இமைகள் சிமிட்டல்
குறைவதாலும் கண்கள் உலர் தன்மை அடைகிறது. இதனால் கண்களில் உறுத்தல்,
எழுத்துக்கள் இரண்டாகவும், பலவாகவும் தெரிதல் மற்றும் பார்வை தெளிவற்றும்
தோன்றுகின்றன.
இந்த சிரமங்களுக்கான காரணங்கள்:
1. உட்காரும் ஆசனத்தின் அமைப்பு, உயரம் மற்றும் நாம் உட்காரும் நிலை.
2 கணினி விசைப் பலகைக்கும், கணினித் திரைக்கும் போதுமான வெளிச்சமின்மை.
3. கணினித் திரையில், கணினி பயன் படுத்துபவர்களுக்குப் பின் புறமுள்ள சன்னல்கள் மற்றும் விளக்குகளிலிருந்து கண் கூசும் ஒளி வீச்சு.
4. கண்களுக்கும் திரைக்குமுள்ள இடைவெளி.
5. கணினி பயன்படுத்தும் தனி ஒருவரின் வயதுக்கேற்றபடி, கண்களின் சரி
செய்யப்படாத தூரப் பார்வை (Myopia), கிட்டப் பார்வை (Hypermetropia),
சிதறல் பார்வை (Astigmatism) மற்றும் வெள்ளெழுத்து (Presbyopia) பார்வை
குறைபாடு.
6. கண்களின் தசை அழற்சியால், கண்கள் ஒருங்கிசைவு சரியில்லாதிருத்தல் (Ocular Muscle Imbalance)
எனவே, உடலிலும், கண்களிலும் ஏற்படும் சிரமங்களைத் தவிர்த்து, சரி செய்வது எப்படி?
உடலிலும், கண்களிலும் ஏற்படும் சிரமங்களெல்லாம் சாதாரணமாக தற்காலிகமானதே.
கணினியில் வேலை செய்வதை நிறுத்தி எழுந்த சில நிமிடங்களில் அதிக தொல்லைகள்
இராது.
கணினியில் வேலை செய்யும் போது, குறிப்புகளை விசைப் பலகைக்கு மேலும்,
கணினித் திரைக்கு அருகிலும் வைத்துக் கொண்டால் நல்லது. ஒரு மணிக்கொரு முறை
ஆசனத்தை விட்டு எழுந்து, அலுவலகத்திற்கு உள்ளேயே சிறிது நடக்கலாம். கை
கால்களை நீட்டி, மடக்கி பயிற்சி செய்யலாம். கழுத்து, தோள் இரண்டுக்கும்
தக்க பயிற்சி செய்யலாம்.
1. உட்காரும் நாற்காலி உயரத்தை வேண்டுமளவு ஏற்றவும், இறக்கவும் தகுந்ததாக
இருக்க வேண்டும். நிமிர்ந்து உட்காரும் பொழுது முதுகுக்குப்
பொருத்தமாகவும், உட்காரவும், சாய்மானத்திலும் Foam வைத்தும் இருக்க
வேண்டும். கைகளை சம நிலையில் வைக்க நாற்காலியில் கைத்தாங்கி வைத்தும்
இருக்கவேண்டும்.
2. கணினி விசைப் பலகையிலும், திரையிலும் நல்ல வெளிச்சம் இருக்கும்படி விளக்குகள் அமைக்கப்பட வேண்டும்.
3. கண்கள் கூசும் ஒளி வீச்சு இருந்தால், கணினியின் இருப்பிடத்தை மாற்றியமைக்க வேண்டும்.
4. கணினியின் திரைக்கு வெகு அருகில் செல்லாமல் சற்று தூரத்திலிருந்தபடி (சுமார் 33 செ.மீ) பார்த்து வேலை செய்ய வேண்டும்.
5. கண் மருத்துவரிடம் கண்களை வருடம் ஒரு முறை, முறையாகப் பரிசோதித்து
தேவைக்கேற்றபடி கண்ணாடி அணிந்து கொள்ள வேண்டும். 40 வயதிற்கு மேல் கண்கள்
பரிசோதனையின் போது, Glaucoma பாதிப்பில்லையென்றறிய, கண்களின் நீர்
அழுத்தத்தையும் (Intraocular Pressure) பரிசோதிக்க வேண்டும்.
வெள்ளெழுத்துக் கண்ணாடிகளை இரண்டு வருடத்துக்கு ஒருமுறை 40 வயதிலிருந்து 55
வயது வரை மாற்ற வேண்டியிருக்கலாம்.
6. தேவையானால், கண் தசைகளின் ஒருங்கிசைவை (Muscle Balance) அரசு கண்
மருத்துவமனைகளில் பரிசோதித்துக் கொள்ளலாம். தேவையானால் பயிற்சியும்
எடுத்துக் கொள்ளலாம்.
கணினியில் வேலை செய்யும்பொழுது, அவவப்பொழுது கண்களுக்கு ஓய்வு கொடுப்பது
அவசியம். தொடர்ந்து கணினியைப் பார்த்துக் கொண்டிராமல், இடையிடையில் சன்னல்
வழியாக தூரத்தில் உள்ள பொருளையோ, வானத்தையோ வேடிக்கை பார்க்கலாம்.
அடிக்கடி கண் இமைகளை மூடி மூடித் திறப்பதால், கண்ணீரினால் கண்கள் ஈரமாகி,
கண்கள் உலர்வதையும், கண்களின் உறுத்தலையும் குறைக்கலாம். மருந்துக்
கடைகளில் கிடைக்கும் Tears PLus, Moisol போன்ற சொட்டு மருந்துகளையும்
உபயோகிக்கலாம்.
கண்களுக்கு மிக அருகிலுள்ள கணினித் திரையையே கண் இமைக்காமல் நீண்ட நேரம்
பார்ப்பதை விட, சுலபமாகப் பின்பற்றக் கூடிய '20 - 20 - 20 சட்டம்' (20 - 20
- 20 Rule) சொற்றொடரின்படி, 20 நிமிடத்திற்கு ஒரு முறை, 20 அடி
தூரத்திலுள்ள பொருட்களை, 20 நொடிகள் பார்ப்பது கண்களுக்கு ஓய்வைத் தரும்
எனப்படுகிறது. அரை மணிக்கொரு முறை 20 நொடிகள் கண்களை மூடியிருப்பதும் நல்ல
பயன் தரும் எனப்படுகிறது.
No comments:
Post a Comment